இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?



நமது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கினை அளித்து சமூக நீதியை தெளிவாக உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

இதற்கு மேலும் ‘வசதி’யானக் காரணங்களைக் கூறி, அவர்களுக்கு உரிய சமூக நீதியைத் தவிர்க்க இயலாத நிலையை நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.

ஒன்று, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையிலுள்ள சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவை, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, தனது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் நிராகரித்துவிட்டது.


PTIஇரண்டாவது, மேற்கு வங்கத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 5-2 நீதிபதிகளின் தீர்ப்பு என்று வழங்கியுள்ள பெரும்பான்மை தீர்ப்பின் முக்கிய அம்சம், இந்த இட ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது, எனவே அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், இப்படி மதத்தை மையப்படுத்தும் இட ஒதுக்கீடு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், நமது நாட்டின் சமூக கட்டுமானத்தின் அங்கமாகவுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியன உரிய அளவிற்குக் கிடைத்திட வேண்டும் என்று விரும்புவோர் அனைவருக்கும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

கல்வி, வேலை வாய்ப்பில் ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமியர்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற பரிந்துரை செய்த பி.எஸ். கிருஷ்ணா ஆய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை - அது தரகுகளை சேகரித்த விதம் முழுமையானதல்ல - என்று கூறி, அதனடிப்படையில் வெளியிடப்பட்ட ஆந்திர அரசின் உத்தரவை நிராகரித்துள்ளது ஆந்திர உயர் நீதிமன்றம்.

அரசமைப்பு உறுதி செய்துள்ள இட ஒதுக்கீடு!

இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் அங்கமாகவுள்ள எந்த ஒரு சமூகமானாலும், அது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவைகளின் மேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பு ஏற்பாடுகளை (இட ஒதுக்கீட்டை) செய்வதற்கு தடையேதுமில்லை என்று இந்திய அரசமைப்பின் பிரிவு 15 (4) கூறுகிறது (சமூக நீதிக்காக தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து 1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் செய்யப்பட்ட முதல் திருத்தம் இது என்பதுக் குறிப்பிடத்தக்கது).

இதே அடிப்படையில், அதாவது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்காக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கும் வழி செய்கிறது கடந்த 2005ஆம் ஆண்டு அரசமைப்பில் செய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.

இது மட்டுமல்ல, நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் - அதாவது அரசுப் பணிகளில் - இப்படி கல்வி, சமூக ரீதியான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிய பிரதிநிதித்தும் (Adequate Representation) பெற மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு செய்யலாம் என்கிறது இந்திய அரசமைப்புப் பிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலேயே - மண்டல் அறிக்கையின் பரிந்துரையின்படி - இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார். பின்னாளில் அதனை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 6-5 என்ற பெரு்ம்பான்மை தீர்ப்பின் மூலம் ஆமோதித்தது.

ஆக, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தினரை (சாதியாகவும் இருக்கலாம், மதப் பிரிவினராகவும் இருக்கலாம்) கல்வி, சமூக ரீதியாக அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அரசமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: