பெங்களூர் அருகே அனேகல் & சந்த்புரா சாலையில் எச்.டி.எப்.சி. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுப்பதுபோல சிலர் வந்து கடந்த சில நாட்களாக நோட்டமிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அந்த மையத்தில் உள்ள காவலாளிகள் அசந்து தூங்குவதையும் கவனித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி. வழக்கம் போல ஏ.டி.எம். மையத்தில் இருந்த காவலாளிகள் கண்ணும் கருத்துமாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மினி லாரி ஒன்றில் திருடர்கள் சிலர் வந்தனர். கேமரா மூலம் அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையத்தின் வாசலில் இருந்த விளக்குகளை அணைத்தனர். தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய கார்டு மூலம் ஏ.டி.எம். மையத்தின் தானியங்கி கதவை திறந்து உள்ளே சென்றனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் மின் சப்ளையை துண்டித்த பின், மெதுவாக அந்த இயந்திரத்தை அலாக்காக தூக்கிக் கொண்டு தயாராக நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் ஏற்றிக் கொண்டு கம்பி நீட்டினர்.
இவ்வளவு நடந்தும் தூக்கத்தில் இருந்த காவலாளிகள் புரண்டு கூட படுக்கவில்லை. விடிந்ததும் ஏ.டி.எம். இயந்திரத்தை காணாமல், தாங்கள்தான் காவலாளிகள் என்பதையும் மறந்து கூச்சலிட்டனர். கடந்த சனிக்கிழமையன்று ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.16 லட்சத்தை வங்கி நிர்வாகிகள் வைத்துள்ளனர். பொதுமக்கள் எடுத்துச் சென்ற தொகை போக இயந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கொள்ளையர்களின் அடையாளம் கூட சொல்லத் தெரியாமல், தூக்கத்திலிருந்த காவலாளிகள் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment