கிருஷ்ணகிரி கும்பலால் கடத்தப்பட்ட மேலும் 2 குழந்தைகள் புதுவையில் மீட்பு

சென்னை: கிருஷ்ணகிரி மற்றும் சென்னையிலிருந்து கடத்தப்பட்ட மேலும் 2 குழந்தைகள் புதுவையில் மீட்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரியிலிருந்து குழந்தைகளை கடத்தி சென்னை, புதுவைக்கு விற்ற சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புதுவையைச் சேர்ந்த லலிதா என்ற மனித உரிமை அமைப்புத் தலைவி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இதுவரை 8 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், லலிதாவின் முத்தியால்பேட்டை வீட்டில் புதுவை சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், லலிதாவின் வீட்டிலேயே இரண்டு குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. இதுகுறித்து லலிதாவின் தாயார் மற்றும் தங்கை ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.


விசாரணையில் இரு குழந்தைகளும் கடத்தல் குழந்தைகள் எனத் தெரிய வந்தது. ஒரு குழந்தையின் பெயர் வித்யா பாரதி. 4 வயதாகும் அக்குழந்தையின் பெற்றோர் மோகன் -லலிதா என்று கூறி போலியான சான்றிதழை நகராட்சியிடமிருந்து பெற்றுள்ளனர்.

இன்னொரு குழந்தையின் பெயர் தேவதர்சன். இக்குழந்தைக்கும் போலியான சான்றிதழ் பெற்றுள்ளனர். இரு குழந்தைகளையும் மீட்ட அதிகாரிகள் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அக் குழந்தைகளை அமைச்சர் கந்தசாமி பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,


மீட்கப்பட்ட குழந்தைகள் தேவதர்ஷன், வித்யபாரதி ஆகியோர் யார் குழந்தைகள் என்று விசாரணை நடத்தப்படும். தங்கள் குழந்தை என்று யாரும் தேடி வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். யாரும் வராவிட்டால் இங்கேயே அந்த குழந்தைகள் வளர்க்கப்படுவார்கள். அதற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.

புதுவை முழுவதும் 52 குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளன. இந்த மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். அங்குள்ள குழந்தைகளின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். அந்த குழந்தைகளை யாரும் தேடி வந்தால் ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இந்தக் குழந்தைகள் தொடர்பாக லலிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீஸார் புதுவைக்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.

ஆனால் லலிதா போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர மறுப்பதாக கூறப்படுகிறது.

நடித்த தனலட்சுமி

இந்த நிலையில், குழந்தைக் கடத்தல் தொடர்பாக முதன் முதலில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தனலட்சுமி மாரடைப்பு வந்தது போல துடித்தார். இதையடுத்து நீதிபதி போலீஸ் காவல் வழங்க மறுத்து விட்டார்.

நேற்று போலீசார் 2-வது முறையாகவும் தனலட்சுமியை காவலில் எடுக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: