கோவை: மினி பஸ் மீது ரயில் மோதி 5 பேர் பலி

கோவை: கோவை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை ஒரு மினி பஸ் கடந்தபோது ரயில் வந்து விட்டதால் பஸ் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கடந்த 1-ந் தேதி முதல் புதிய பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை 4.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டது. நஞ்சப்பன் ரயிலை ஓட்டி வந்தார்.


கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த இடிகரை, தெற்குபாளையம் பகுதியில் உள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட் அருகே அந்த ரயில் மாலை 4.45 மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரயில் 800 அடி தூரத்தில் வந்து கொண்டிருந்தபோது பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து இடிகரை சென்ற மினி பஸ் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. ஆனால் அதற்குள் ரயில் வந்து விட்டதால் பலத்த சப்தத்துடன் பஸ் மீது ரயில் மோதி விட்டது.

உடனடியாக டிரைவர் நஞ்சப்பன் ரயிலை நிறுத்தினார். இருப்பினும் ரயிலின் வேகம் காரணமாக மினி பஸ் கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து போனது.

விபத்தைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் உள்ளே சிக்கி நசுங்கினர். சிலர் வெளியில் வந்து விழுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்தில் உத்ரா என்ற 20 வயது மாணவியும், 50 வயது முதியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்து மக்கள் வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில்15 வயதான மாணவர்கள் மதன் குமார், ஜெயராமன், 12 வயது ஜெகதீஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து ஒருவர் கூறுகையில், மினி பஸ்சில் பாட்டு சத்தமாக ஒலிபரப்பானது. இதனால் ரயில் வரும் சப்தம் டிரைவருக்குக் கேட்கவில்லை. மேலும், பஸ்சும் வேகமாக வந்தது. இதனால்தான் விபத்து நேரிட்டு விட்டதாக கூறினார்.

இந்த விபத்தில் மினி பஸ்சின் டிரைவர் பஸ்சிலிருந்து குதித்து உயிர் தப்பி ஒடியுள்ளார். பஸ்சுக்குள் இருந்த பலரும் ரயில் வருவதாக சத்தம் போட்டுக் கூறியுள்ளனர். ஆனால் டிரைவர் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஓட்டி வந்துள்ளார். டிரைவரின் இந்த அலட்சியம் காரணமாக கோர விபத்து ஏற்பட்டு விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் கண்டக்டர் கருத்தப் பாண்டி காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். பஸ்சில் பயணித்தவர்களில் பலரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் தொழிலாளிகள் ஆவர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மத்திய அமைச்சர் ராசா, அமைச்ச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.

நிதியுதவி - கருணாநிதி அறிவிப்பு

இந்த விபத்து குறித்து முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயம்பட்டோருக்கும் உதவித் தொகையை அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ரயில் மோதியதில் மினி பஸ்சில் பயணம் செய்த 5 பேர் பலியான துயர சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தார். உடனடியாக அந்த குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் ரூ.5 லட்சமும், காயம் அடைந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.1 லட்சத்து 75 ஆயிரமும் முதல் -அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார். மொத்தம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: