தமிழகத்தில் 5 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

சென்னை: தமிழகத்தில் 5 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) ரத்து செய்துள்ளது.

மேலும் 3 கல்லூரிகளில் பி.இ இடங்களைக் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. நாடு முழுவதும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சோதனை நடத்தியது.

இதில் தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் உள்ள சன் என்ஜினீயரிங் கல்லூரி, அடையாளபட்டில் உள்ள பி.எம்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, கோயம்பேட்டில் உள்ள ஜே.ஏ.என்ஜினீயரிங் கல்லூரி, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள வி.கே.கே.விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி, தர்மபுரியில் உள்ள பத்மாவதி என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளும் அடக்கம்.

இந்தக் கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள், கட்டிடங்கள், நூலகங்கள், ஆசிரியர் நியமனம் ஆகியவை ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை மீறியிருந்தன. இதைத் தொடர்ந்து இந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறுகையில்,

சி.பி.ஐ. ரெய்ட் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி இல்லை. இந்த வருடம் அனுமதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். ஆனால், சி.பி.ஐ. விசாரணை நடப்பதால் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி கொடுப்பது கஷ்டம். எனவே இப்போதைக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி இல்லாததால் இந்த 5 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது.

இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டாலும் மற்ற கல்லூரிகளில் நிறைய இடங்கள் உள்ளன. எனவே விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இடம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு 65 கல்லூரிகளில் கட்டமைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 62 கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டன.

3 கல்லூரிகள் மட்டும் அதைச் செய்யத் தவறிவிட்டன. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜே.ஏ.என்ஜினீயரிங் கல்லூரியின் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஏற்கனவே இருந்த இடங்களில் மொத்தம் 145 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரியிலும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

நாடு முழுவதும் 545 தொழிற் கல்லூரிகளுக்கு அனுமதி:

இதற்கிடையே இந்தியா முழுவதும் இந்த ஆண்டு, புதிதாக 545 தொழிற் கல்வி கல்லூரிகள் தொடங்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு 1,131 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க 2,176 விண்ணப்பங்கள் வந்தன.

இதில் 1,600 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கப்பட்டு 545 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 7,361 தொழில் கல்வி கல்லூரிகள் உள்ளன. அதில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 13 என்ஜினீயரிங் கல்லூரிகள்:

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 545 கல்லூரிகளில், 13 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ளவையாகும்.

தமிழ்நாட்டில் இப்போது 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: