சென்னை: அரசின் உத்தரவை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் தரலாம். அப்படி தரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தர்ம.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் இவ்வளவுதான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு நியமித்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்து, அதை தமிழக அரசும் அமல்படுத்தியுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் இதை மீறி கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். சென்னையி்ல் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் கல்வி அதிகாரிகள் சென்று பல பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்விக்கட்டணத்தை நிர்ணயித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அலுவலகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மாணவர் சங்கத்தினரும், பெற்றோரும் நேரடியாக இங்கு வந்து புகார்செய்த வண்ணம் உள்ளனர்.
தினசரி ஏராளமானோர் வந்து போராட்டம் நடத்தி வருவதால் டி.பி.ஐ. வளாகத்திலும், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அலுவலகம் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரும், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருமான தர்ம. ராஜேந்திரன் கூறுகையில்,
அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு அதிகாரிகள் குழு சென்று ஆய்வு மேற்கொண்டு விளக்க நோட்டீசும் அளிக்கப்படும் என்றார்.
மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் பிச்சை கூறுகையில், மாவட்டங்களில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பு தொடர்பான புகார்களை முதன்மை கல்வி அதிகாரியிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment