
Vote this article (0) (0)
சென்னை: பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது 40 மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த போலி சான்றிதழை வாங்க ஒவ்வொரு மாணவரும் ரூ. 1.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ள திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. போலி சான்றிதழை சமர்ப்பித்தவர்களில் மாணவிகளும் அடக்கம்.
பொறியியல் கவுன்சிலிங்கின்போது இவர்கள் இந்த சான்றிதழ்களின் நகல்களை சமர்பித்தனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோதுதான் அவை போலியானவை என்று தெரிய வந்தது.
இவர்களில் 3 பேருக்கு கவுன்சிலிங் மூலம் பிரபலமான பொறியியல் கல்லூரிகள் கூட ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில்தான் போலி மதிப்பெண் பட்டியல் விவகாரம் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் ரைமான்ட் உதயராஜ் கூறுகையில், ஏறகனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள 3 மாணவர்களின் அட்மிஷனை நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் அவர்களின் ஒரிஜினல் சான்றிதழையும் வாங்கியுள்ளோம். அது போலியானதுஎன்று தெரிய வருகிறது. இவற்றை மேல் பரிசோதனைக்காக தேர்வுகள் இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
இநத் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைப் பெறுவற்காக மாணவ, மாணவியர் தலா ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவிட்டுள்ளதாக தெரிகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவி சமர்ப்பித்த அசல் மதிப்பெண் சான்றிதழில் ஒரு மதிப்பெண்ணும், நகல் மதிப்பெண் சான்றிதழில் இன்னொரு மதிப்பெண்ணும் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கவுன்சிலிங் மூலம் இதுவரை 19 ஆயிரத்து 198 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். முதல் கட்ட கவுன்சிலிங் வருகிற 20-ந் தேதி முடிவடைகிறது.
தற்போது நடந்துள்ள மோசடி எப்படி நடந்துள்ளது என்றால் மறு கூட்டல், மறு திருத்தம் மூலம் கிடைத்த மதிப்பெண் பட்டியல்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுகள் இயக்குநரகம் அனுப்பி வைத்துள்ளது. அதேசமயம், மாணவர்கள் சமர்ப்பித்த சான்றிதழுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதில் வேறுபாடு தெரிந்ததால்தான் இந்த மோசடி அம்பலத்திற்கு வந்தது.
இப்படி மோசடியான சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுத்த கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு எச்சரிக்கை:
இந் நிலையில் போலி சான்றிதழ்கள் மூலம் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
இதுவரை நடைபெற்றுள்ள கலந்தாய்வின் மூலம் 20,843 மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட மொத்த மாணவர்களில், 16.47 சதவீத மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் கல்லூரிகளில் சேர முயன்ற 41 பேரும், போலி இருப்பிடச் சான்றிதழை பயன்படுத்திய 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். போலி சான்றிதழ்களை பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்பதால், பெற்றோர்கள் பதட்டம் இல்லாமல் உரிய சான்றிதழ்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment