மோடிக்கு மீண்டும் அமெரிக்கா விசா மறுப்பு!



இந்தியாவின் சமயப் பொறையுடைமைக்கு நிரந்தர இழுக்கும் அவமானமும் தேடித் தந்த நரேந்திர மோடி கடந்த 2002-ஆம் ஆண்டில் காவிப் படையினரை ஏவிவிட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தது தெரிந்ததே. கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத்திகளின் கலை விழா என்ற பெயரில் அமெரிக்காவில் இருக்கும் தனது கூட்டாளிகள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு மோடி செல்ல முயன்ற போது அமெரிக்கா உள்நுழை அனுமதி மறுத்ததும் தெரிந்ததே. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்திய அரசும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது.
நியூஜெர்சியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத்திக் கலாச்சார மாநாடு என்ற பெயரில் மோடியின் ஆதரவாளர்கள் ஒரு விழாவை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள வருமாறு மோடிக்கு அழைப்பு அனுப்பியிருந்தனர். இதில் கலந்துகொள்ள சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்ததை அமெரிக்க அரசு முன்பு தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி மீண்டும் மோடிக்கு விசா அனுமதியை மறுத்துள்ளது.



முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பான சர்வதேச மத உரிமைகள் குழுமம் "பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழிக்க உறுதுணையாக இருந்த மோடி, இதுவரை பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பாதுகாப்புக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மனித நேயத்திற்கு எதிரான இக்குற்றங்களை மோடி நிகழ்த்தியதை ஊடகங்கள் ஆதாரத்துடன் நிரூபித்த போதிலும் அதனை மழுப்பலாக மறைக்க மோடியால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிலை தொடர்வதால் மோடிக்கு விசா வழங்குதலுக்கு எவ்வித நியாயமும் இல்லை" எனப் பரிந்துரைத்திருந்தது.



இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க இயலவில்லை என்று மோடிக்குத் தெரிவித்து விடுமாறு அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.



மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா விசாவில் அமெரிக்க வரத் தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் மோடி நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.



தனக்கு எதிராகக் குரல் கொடுப்போரின் மீது பொய்வழக்குப் போடவும், பதவியில் இருந்த தனது கைக்கூலிகளைக் கொண்டு நிகழ்த்திய போலி என்கவுண்டர்களை நியாயப்படுத்தவும் மோடி தயங்குவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குஜராத் கலவரங்களுக்கு மோடி தான் காரணம் - கொலையாளிகள் ஒப்புதல்!

புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

இதைத் தெஹெல்கா புலனாய்வு இதழ் ரகசியமாகப் படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெஹெல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசியப் புலனாய்வில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் தீ விபத்து ஆகும். சுமார் 50க்கும் மேற்பட்ட கரசேவக்குகள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 'இரத்தம் கொதிக்க'க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது.

இக்கலவரங்கள் நடந்த போதே இந்திய உச்சநீதிமன்றம் மோடியைக் கடமையில் இருந்து தவறியதாகக் கண்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது. முஸ்லிமாக இருந்ததால் சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பாதுகாக்க மறுத்தது மோடி அரசு. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஃப்ரி தன்னை நாடிவந்த அப்பாவி முஸ்லிம்களைக் காக்க முயன்ற போது தன் உயிரையும் இழக்க நேரிட்டது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதை மட்டுமல்லாது இந்துத்துவாவின் நச்சுக்கரங்கள் புற்றுநோய்போல அரசு இயந்திரத்தினுள்ளும் புரையோடி இருப்பதையும் தான் காட்டுகிறது.

இது குறித்த விரிவான செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த தெஹெல்கா வீடியோ ஆவணங்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இதில் புதிதாக ஒன்றும் இல்லை என்றும் மோடி தான் இந்தக் கொடூரக் கொலைவெறியாட்டத்தின் சூத்திரதாரி என்பது ஊரறிந்த ரகசியம் என்றும் இப்போது இது ஆவணப்படுத்தப் பட்டுள்ளதால் இந்திய அரசு இக்கயவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இது குறித்து பாஜக கருத்துத் தெரிவிக்கையில், இந்த வீடியோ ஆவணம் காங்கிரஸிடம் கையூட்டு பெற்று தெஹெல்கா உருவாக்கியுள்ளதாகவும், மோடியை இழுக்குச் செய்யும் முயற்சி இது என்றும் வெட்கம் கெட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: