இந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு


டெல்லி: இந்திய ராணுவம், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றுவோருக்கும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்ர்களுக்கும் விசா வழங்க கனடா மறுத்து வருகிறது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

எல்லைப் பாதுகாப்புப் படையை மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் படை என்று கூறியது குறித்து கனடா தூதரகத்திடம் மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் கோரியது. இதையடுத்து நாங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று தூதரகம் மறுத்தது.

இந் நிலையில் ஏற்கனவே இந்திய ராணுவம் மற்றும் உளவுத் துறையினர் பலருக்கும் கனடா விசா வழங்க மறுத்துள்ள விவரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மத்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி எஸ்.எஸ்.சித்து கனடாவில் உள்ள தன்னுடைய மகனை பார்க்க கடந்த மார்ச் மாதம் விசா கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் பணியாற்றிய உளவுத்துறை, ஜனநாயக நாடுகளில் உளவு பார்த்தல், ஆட்சி கவிழ்ப்பு, தீவிரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடியது என்றும், ஆகவே, அவருக்கு விசா வழங்க முடியாது என்றும் டெல்லி கனடா தூதரகம் கூறிவிட்டது.

இதேபோல், ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் ஏ.எஸ்.பாகியா, ஆர்.என்.பத்ரா, ராணுவத்தில் தற்போது பிரிகேடியர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் 3 அதிகாரிகள் ஆகியோருக்கும் கடந்த 2 ஆண்டுகளில் கனடா விசா வழங்க மறுத்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் கனடா செல்கிறார். அதுதொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கனடா செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கும் கனடா விசா வழங்க மறுத்தது.

பின்னர் மத்திய அரசு நேரில் தலையிட்டதையடு்த்த அவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

கனடா தூதரகத்தின் இந்த செயல்கள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்தப் பிரச்சினையை கனடாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறும், கனடாவை மன்னிப்பு கோர வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கனடா தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு வாரத்துக்குள் கனடா இதைச் செய்யாவிட்டால், இந்தியா வழியாக ஆப்கானிஸ்தான் சென்று வரும் கனடா நாட்டு ராணுவத்தினர், உளவுப் பிரிவினர், அதிகாரிகளை திருப்பி அனுப்பி பதிலடி கொடுப்போம் என்றும் ஜி.கே.பிள்ளை எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள கனடா தூதர் சோபி அகரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து, கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையி்ல், இந்திய அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்தது குறித்து கனடா தூதரகம் மற்றும் கனடா அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதற்கு கனடா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது என்றார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: