
திண்டுக்கல் : பாலைவனத்தில் மட்டுமே விளையும் பேரிச்சை, திண்டுக்கல் அருகே பயிரிட்டு விவசாயி ஒருவர் நல்ல விளைச்சல் கண்டு சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடியில் டி.ஆர்., அன் சன்ஸ் பேரிச்சை தோட்டம் 13 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டில், கன்றுகள் நடப்பட்ட நிலையில், தற்போது பேரிச்சை நல்ல விளைந்துள்ளது. இங்கு 614 பேரிச்சை கன்றுகள் நடப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றுக்கும் தினமும் 100 லி தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது பெண் பேரிச்சை கன்றுகள் மட்டுமே காய்க்கின்றன. ஆண் செடிகள் மகரந்த சேர்க்கைக்காக வைக்கப்பட்டுள்ளன. சீசன் மார்ச்சில் துவங்கி ஆகஸ்டில் முடிந்து விடும். ஒரு மரத்திலிருந்து 30 முதல் 300 கிலோ வரை பழங்கள் கிடைக்கிறது. இவை மரமாகி 65 ஆண்டு வரை பயன் தரக்கூடியது. 65 முதல் 70 அடி உயரம் வளரக்கூடியது. ஒரு கிலோ பேரிச்சை 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தோட்ட உரிமையாளர் அன்பழகன், மேலாளர் சரவணன் கூறியதாவது: இந்த பேரிச்சை பரி வகையை சேர்ந்தது. இவற்றை பழுக்க வைத்து பதப்படுத்தினால் ஓராண்டு வரைக்கும் கெடாமல் இருக்கும். பாலைவனத்தில் மட்டுமே வளரக்கூடிய பேரிச்சைக்கு தண்ணீர் தேவையில்லை என்பது தவறான கருத்தாகும். பாலைவனத்திலேயே தண்ணீர் உள்ள இடங்களில் தான் இவை வளரும். லண்டனிலிருந்து சிசு வளர்ப்பு செடிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இங்கு நட்டுள்ளோம்.தோட்டம் முழுவதும் சொட்டு நீர் பாசனம் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
0 comments:
Post a Comment