கோடியில் ஊழல் செய்வோரை விட்டு விடும் அரசு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி : பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு, என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

"நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்'

எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். தேவைப்பட்டால் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: