தேமுதிகவை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை: 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த கையோடு நாளை மறு நாள் பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. மறுபக்கம் கொதித்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்து அவர் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கவும் அவர் தயாராக இல்லை. உண்மையில் ஜெயலலிதா போட்ட மெகா 'மாஸ்டர் பிளான்' திட்டம் இப்போதுதான் அம்பலமாக தொடங்கியுள்ளது.

யாருமே இந்த கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். அந்த அளவுக்கு தனது முக்கியமான எதிரிக்கு சரியான ஆப்பு வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுகவும், கருணாநிதியும் மட்டுமே. அவர்கள் நிரந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவுக்கு முளைத்து வந்த மிகப் பெரிய எதிரி, முக்கிய எதிரி தேமுதிக.

தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது அதிமுக மட்டுமே. அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டது தேமுதிக. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் போல கடித்தாலும், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான்.

எனவேதான் இந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தரப்பு கடுமையாக முயன்று வெற்றியும் பெற்றது. இந்த வேலையைப் பார்த்தவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட அந்த பத்திரிக்கையாளர் தான்.

திமுகவை வலிமையோடு எதிர்க்கத்தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துள்ளார் எனறு எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க ஜெயலலிதாவின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.

அது - முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக முளைத்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, பள்ளத்தில் விழ வைக்க வேண்டும் என்பது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மிக சாதுரியமாக ஜெயலலிதா விரித்த வலையில் தானாக வந்து விழுந்து சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.

ஜெயலலிதாவின் திட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்...

1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.

2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான். எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.

4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது.

இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது.

தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.

தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.

இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா.

ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ், திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை.

நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: