லாரி வாடகை உயருகிறது-சர்க்கரை விலை உயர்ந்தது-அடுத்து அரிசி, கோதுமை விலை உயரும்

சென்னை: வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளின் வாடகைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதையடுத்து சர்க்கரை, பூண்டு, ஏலக்காய், புளி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டது. அடுத்து அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றின் விலையும் கிடுகிடுவென உயரப் போவதால் மக்கள் தலையில் கையை வைத்துக் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அரசுகளுக்கு பெட்ரோலிய நிறுவனங்களை எப்படி நஷ்டத்திலிரு்நது காப்பாற்றுவது என்பதில்தான் அதிக அக்கறை உள்ளது. மக்களின் கஷ்டத்தைப் பற்றி பெரிய அளவில் கவலை ஏற்படுவதில்லை.

இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் அவ்வப்போது உயர்த்தி வந்தனர். இந்த முறை ஒட்டுமொத்தமாக, ஒரேயடியாக பெட்ரோல், டீசல், மண்ணெணெய், காஸ் என அனைத்தின் விலையையும் உயர்த்தி விட்டனர். இதன் விளைவு மக்கள் தலை மீது விடிய ஆரம்பித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை உயர்த்த ஆரம்பித்து விட்டனர்.இதனால் தமிழகத்திற்கு வரும் சரக்கு லாரிகளின் வாடகை உயர்வால், பொருட்களின் விலையும் உயரத் தொடங்கி விட்டது.

இதன் காரணமாக மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது. இது மொத்த விலை உயர்வு. இதை வாங்கி கடைகளில் சில்லரை விலைக்குக் கொடுக்கும்போது கடைக்காரர்கள் இஷ்டத்திற்கு விற்கும் அபாயமும் கூடவே உள்ளது.

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரி வாடகை ரூ.500 வரை உயரவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அரிசி விலை உயரும்.

அரிசி, மிளகாய் வத்தலை தவிர அனைத்து மளிகை பொருட்களுக்கும் வெளி மாநிலங்களை சார்ந்துதான் தமிழக மக்கள் இருக்கவேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே சர்க்கரை, பாமாயில், பருப்பு விலைகள் உயரத் தொடங்கியுள்ளன.பருப்புக்கு நாம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

இந்த மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரி வாடகை ரூ.5 ஆயிரம் வரை உயருகிறது. துவரம் பருப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கிலோ ரூ.100 வரை உயர்ந்தது. இப்போது படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ முதல் ரக துவரம் பருப்பு ரூ.65-க்கு விற்பனையாகிறது.

ஆனால் லாரி வாடகை உயர்வால் இந்த விலை மீண்டும் உயர்வுப் பாதைக்குத் திரும்பும். அத்தோடு பாமாயில், கோதுமை, ரவை, மைதா ஆகியவற்றின் விலையும் உயரும்.

சர்க்கரை விலை 100 கிலோ மூட்டை ரூ. 100 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ. 2650க்கு விற்ற சர்க்கரை தற்போது ரூ. 2750 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.150-க்கு விற்பனையானது, ரூ.200 ஆகவும், பெரிய பூண்டு ரூ.90-க்கு விற்பனையானது, ரூ.100 ஆகவும், சிறிய பூண்டு ரூ.60-க்கு விற்பனையானது, ரூ.80 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ முதல் ரக புளி ரூ.60-க்கு விற்பனையானது, ரூ.70 ஆகவும், இரண்டாம் ரக புளி ரூ.40-க்கு விற்பனையாது, ரூ.50 ஆகவும் அதிகரித்துள்ளது. ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது, ரூ.2,000 ஆகவும், முந்திரி பருப்பு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்பனையானது, ரூ.400 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

லாரி வாடகைக் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வந்த பின்னர் இந்தப் பொருட்கள் அனைத்தும் கடும் உயர்வைக் காணும் என்பதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் மூழ்கியுள்ளனர்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: