காபூல்:ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை தற்போது இக்கட்டான நிலையை அடைந்துள்ளது என அமெரிக்க தளபதி தெரிவித்துள்ளார். தற்போது, ஒன்றரை லட்சம் வெளிநாட்டு வீரர்கள் ஆப்கனில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்த அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை ஒப்படைக்க தலிபான் ஆட்சியாளர்கள் தவறியதால், கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், தலிபான்கள் ஆட்சியை இழந்தனர்.அன்று முதல், அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தும் பாதுகாப்பு இன்னும் ஸ்திரத்தன்மை பெறவில்லை. எனவே, அன்னிய நாட்டு படைகளின் உதவி ஆப்கனுக்கு தேவைப்படுகிறது. இதனால், ஒன்றரை லட்சம் வெளிநாட்டு படைகள் தற்போது ஆப்கனில் உள்ளன.சர்வதேச உதவி படைகளுக்கு தளபதியாக இருந்த ஸ்டான்லி மெக்கிரிஸ்டல், அமெரிக்க அதிபரை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததால், அவர் அந்த பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இவருக்கு பதில் தற்போது டேவிட் பீட்ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த பதவியை வகித்தவர்.வெளிநாட்டு படைகளுக்கான தளபதி பொறுப்பை ஏற்றுள்ள டேவிட் குறிப்பிடுகையில், "கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்த சண்டையில் ஆயிரத்து 900 வெளிநாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.
சமீப காலமாக தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. வெளிநாட்டு படையினர் மீதான தற்கொலை படை தாக்குதல் அதிகரித்துள்ளது. தலிபான்களுக்கு எதிரான வெளிநாட்டு படையினரின் சண்டை தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.அதுமட்டுமல்லாது, அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு படையை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற வேண்டிய உறுதி மொழியையும் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டு படையையும் வலுவானதாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது' என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment