
ஸ்ரீநகர் : காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகளை, போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது; ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த வாரம் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரக்காரர்களை கலைக்க, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர்கள் சிலர் பலியாயினர்.
இதைத் தொடர்ந்து, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹூரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், ஒருவார காலமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் உட்பட பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் தெற்கு காஷ்மீர், அனந்த்நாக் பகுதியில், ஊரடங்கு உத்தரவு நேற்று காலை மூன்று மணி நேரம் தளர்த்தப்பட்டது. அப்போது ஹூரியத் மாநாட்டு அமைப்பை சேர்ந்தவர்கள், சாலைகளில் திரண்டனர். இளைஞர்கள் சாவுக்கு காரணமான பாதுகாப்புப்படை வீரர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட ஹூரியத் தலைவர்களை விடுவிக்கவும் கோஷங்களை எழுப்பினர்.போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானது.
இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment